நீட் பாதிப்பு தொடர்பாக வரும் 13ஆம் தேதிக்குப் பிறகு ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் பத்திரிகையாளர்களுக்காக நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சாமிநாதன், சேகர் பாபு உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். இதில், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், திமுக அரசின் நிர்வாகத்திறமையால் கூடுதலாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கூறினார். ஏ.கே.ராஜன் குழுவின் கால அவகாசம் 10-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், பாஜக தரப்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையைப் பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார். வரும் 13ஆம் தேதிக்கு பிறகே ஏ.கே.ராஜன் குழு தனது நீட் தேர்வு பாதிப்பு அறிக்கையை வழங்கும் என்று தெரிவித்தார்.







