நீட் தேர்வு விவகாரம் – திமுக மாணவரணியின் ஆர்பாட்டம் ஒத்திவைப்பு!

நீட் தேர்வு விவகாரத்தை கண்டித்து திமுக மாணவரணியின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த  ஆர்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது.  நீட் தேர்வு நடைபெற்ற தினத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில்…

நீட் தேர்வு விவகாரத்தை கண்டித்து திமுக மாணவரணியின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த  ஆர்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது.  நீட் தேர்வு நடைபெற்ற தினத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்ததாகவும்,  ஆள்மாறாட்டம் நடந்ததாகவும் புகார் எழுந்தது.  ஆனால், இதை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) மறுத்திருந்தது.

இதனிடையே,  இம்மாத தொடக்கத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாயின.  இதில் ஹரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் படித்த 6 பேர் 720 மதிப்பெண்கள் பெற்றதும் 1, 563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்ததோடு அவர்களுக்கு 23-ம் தேதி மறு தேர்வு நடத்துவதாகவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

நீட் தோ்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் பீகாா் பொருளாதாரக் குற்றப்பிரிவு அதிகாரிகள் 13 பேரை கைது செய்துள்ளனர்.   நீட் தேர்வு குளறுபடி மற்றும் வினாத்தாள் கசிந்த விவகாரத்தை கண்டித்து நாடு முழுவது கண்டன ஆர்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

திமுக மாணவரணி சார்பில் நீட் தேர்வை கண்டித்து  திமுக மாணவர் அணி சார்பில் ஜூன் 24ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கண்டன ஆர்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் திமுக மாணவரணி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.