இரு கைகளை இழந்தும் தன்னம்பிக்கையுடன் 10-ம் வகுப்பு தேர்வில், பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாற்றுத்திறனாளி மாணவரை, முதலமைச்சர் ஸ்டாலின் செல்போனில் தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூர் கிராமத்தில் தாயுடன் வசித்து வரும் இரண்டு கைகளை இழந்த மாற்றுத்திறனாளி மாணவர் க்ரித்தி வர்மா, நெடுமருதி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வெளியான 10ம் வகுப்பு பொது தேர்வில், பள்ளி அளவில் 437 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். அவருக்கு ஆசிரியர்கள், உறவினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
மாணவர் க்ரித்தி வர்மா, தமது மகன் க்ரித்தி வர்மாவிற்கு, சிறுவயதில் மின்சாரம் தாக்கியதில் இரண்டு கைகளையும் இழக்க நேரிட்டதாகவும், இருப்பினும் அவர் சிரமப்பட்டு படித்து, தற்போது 10ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளதாகவும் தாய் கஸ்தூரி மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும் மகன் க்ரித்தி வர்மாவிற்கு செயற்கை கைகள் பொருத்த அரசு உதவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக நியூஸ் 7 தமிழில் படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து மாணவர் க்ரித்தி வர்மாவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அவருக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும், நீங்கள் உதவி கேட்டு உள்ளீர்கள். அரசாங்கம் சார்பாக செய்து கொடுக்கிறோம். மாவட்ட ஆட்சியரை அனுப்புகிறேன். உங்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கிறோம். உடல்நலத்தை பற்றி கவலைப்பட வேண்டாம். என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொடுக்கிறேன் என உறுதி கூறினார்.








