1921ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாண சட்டமன்றமாக தொடங்கி, தற்போது 100வது வருடத்தை எட்டியிருக்கிறது தமிழ்நாடு சட்டமன்றம். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொள்ள சட்டமன்ற நூற்றாண்டு விழாவும் இன்று நடைபெற்று முடிந்தது. 100 வருடத்தை எட்டியுள்ள தமிழ்நாடு சட்டமன்றத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் சபாநாயகர் இருக்கையும் 100 வயதைத் தொடுகிறது.அந்த இருக்கையின் வரலாற்று பின்னணியை திரும்பி பார்ப்போம்.
வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த சபாநாயகர் இருக்கை தேக்கு மரத்தால் பல்வேறு சிறப்பு வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டது. ஐக்கிய ராஜ்ஜியத்தின் (United Kingdom) நாடாளுமன்ற சபாநாயகரின் இருக்கையை ஒத்தே இது அமைக்கப்பட்டது. இருக்கையை மெட்ராஸ் மாகணத்தில் ஆளுநராக இருந்த லார்ட் வெலிங்டன், அவரது மனைவி லேடி வெலிங்டன் ஆகியோர் 1922ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி நடந்த கூட்டத் தொடரின்போது பரிசளித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தன்னுடைய தாத்தா பிராண்ட் ஐக்கிய ராஜ்ஜியத்தின் நாடாளுமன்றத்தில் சபாநாயகராக இருந்தார் எனவும், தான் சபாநாயகர் நாற்காலி நிழலில் வளர்க்கப்பட்டதாகவும், அதனால் தான் இந்த இருக்கையை வழங்குவதாகவும் பெருமிதத்தோடு குறிப்பிட்டார் ஆளுநர் வெலிங்டன். இருக்கையில் முதல்முதலாக அப்போதைய சபாநாயகர் பி.ராஜகோபாலாச்சாரியார் அமர்ந்து அவையை வழிநடத்தினார்.
தற்போது கொரோனா பரவல் காரணமாக சட்டமன்றக் கூட்டத் தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் நிலையில், சிறப்புவாய்ந்த சபாநாயகர் இருக்கையும் தற்காலிக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
த.எழிலரசன்