நாகலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது; “மோன் மாவட்டம் ஓடிங் பகுதியில் கிளர்ச்சியாளர்களின் நடமாட்டம் இருப்பதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து 21 பேர் கொண்ட சிறப்பு கமாண்டோ குழு, கிளர்ச்சியாளர்கள் நடமாட்டம் உள்ளதாக சந்தேகிக்கப்பட்ட பகுதியில் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, அந்த பகுதியில் வாகனம் ஒன்று வந்தது. வாகனத்தை நிறுத்துமாறு சிக்னல் கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த வாகனம் அங்கிருந்து வேகமாக செல்ல முற்பட்டது. இதனால், அந்த வாகனத்தில் கிளர்ச்சியாளர்கள் தான் இருக்கிறார்கள் என்ற சந்தேகத்தால் கமாண்டோ படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில், வாகனத்தில் பயணித்த 8 பேரில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் தவறுதலாக நடந்துவிட்டது என்பது பின்னர் தான் தெரியவந்தது. படுகாயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காக அருகில் உள்ள ராணுவ மருத்துவ முகாமில் அனுமதிக்கப்பட்டனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து அறிந்த உள்ளூர் கிராம மக்கள் அங்கிருந்த ராணுவ வீரர்களை சுற்றிவளைத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். 2 வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.
கிராம மக்கள் நடத்திய தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார். மேலும், சில வீரர்கள் படுகாயமடைந்தனர். இதனால், தங்களை தற்காத்துக்கொள்ளவும், கூட்டத்தை கலைக்கவும் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் மேலும், 7 பொதுமக்கள் உயிரிழந்தனர். சிலர் படுகாயமடைந்தனர். உள்ளூர் நிர்வாகமும், போலீசாரும் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்து வருகின்றனர்” என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.