‘முடா’ முறைகேடு விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், லோக்ஆயுக்தா போலீஸ் எஃப்ஐஆர் பதிவு செய்தது.
கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு ரூ. 56 கோடி மதிப்பிலான 14 இடங்களை மைசூரு நகர வளர்ச்சி ஆணையம் ஒதுக்கியிருந்தது. இதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக பெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எஸ்.பி.பிரதீப் குமார், டி.ஜே.ஆபிரகாம், மைசூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சிநேகமாயி கிருஷ்ணா ஆகியோர் அளித்த மனுக்களின் பேரில், முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு தொடுக்க, அந்த மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி அனுமதி வழங்கினார்.
ஆளுநரின் இந்த முடிவை எதிர்த்து முதலமைச்சர் சித்தராமையா தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில், சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்கத் தடை இல்லை என்று நீதிபதி நாக பிரசன்னா உத்தரவிட்டு சித்தராமையாவின் மனுவை தள்ளுபடி செய்தார்.
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையில் கர்நாடக லோக் ஆயுக்தா மைசூரு மாவட்ட காவல்துறை சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்து 3 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் முதலமைச்சர் சித்தராமையா மீது லோக்ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவரது மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜுனசாமி மற்றும் தேவராஜூ ஆகியோர் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.







