கோவையில் செல்போனில் அடிக்கடி பேசி வந்த மகளை பெற்ற தாயே குழவிக்கல்லை போட்டு கொலை செய்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை கணுவாய் பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகமணி. இவருடைய மகள் மகாலட்சுமிக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மகாலட்சுமியின் கணவர் சரவணகுமார் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தாயுடன் வசித்துவந்த மகாலட்சுமி அடிக்கடி செல்போனில் பேசிவந்துள்ளார். இதனால் குழந்தைகளைக் கவனிப்பதில் மகாலட்சுமிக்கும் தாய் நாகமணிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. முன்னதாக தாய், மகள் இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று மது அருந்திவிட்டு தாயும் மகளும் மதுபோதையிலிருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் மகாலட்சுமி தூங்கிக்கொண்டிருந்தபோது குழவிக்கல்லை அவர் தலையில்போட்டு நாகமணி கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து மகாலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் நாகமணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். குடிபோதையில் பெற்ற தாயே தனது மகள் தலையில் குழவிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







