பண மோசடி புகார் – ஆர்யா நேரில் விளக்கம்

பண மோசடி புகார் தொடர்பாக நடிகர் ஆர்யா சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜராகி விளக்கமளித்துள்ளார். திருமண ஆசை கூறி 71 லட்ச ரூபாய், மோசடி செய்ததாக…

பண மோசடி புகார் தொடர்பாக நடிகர் ஆர்யா சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜராகி விளக்கமளித்துள்ளார்.

திருமண ஆசை கூறி 71 லட்ச ரூபாய், மோசடி செய்ததாக நடிகர் ஆர்யா மீது ஜெர்மனியை சேர்ந்த விட்ஜா என்ற பெண் புகார் அளித்தார். திருமண ஆசை காண்பித்து அவ்வப்போது இணையவழியாக தன்னிடமிருந்து ஆர்யா பணம் பெற்றதாகவும் விட்ஜா குற்றம்சாட்டியிருந்தார். பண மோசடி தொடர்பாக சிபிசிஐடி போலீசாரிடம் ஆன்லைனில் புகார் அளித்த விட்ஜா, நீதிமன்றத்திலும் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது ஆர்யாவின் மீதான புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனை தொடர்ந்து நடிகர் ஆர்யாவுக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பினர். இந்நிலையில் சென்னை வேப்பேரியில் பெருநகர காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆர்யா ஆஜரானார். அவரிடம் ஆய்வாளர் கீதா விசாரணை நடத்தினார்.

சுமார் இரண்டு மணி நேர விசாரணைக்கு பின்னர் ஆணையர் அலுவலகத்திலிருந்து வெளிவந்த ஆர்யா செய்தியாளர்களை சந்திக்காமல் சென்றுவிட்டார். ஆர்யா கடந்த 2019ல் சாய்ஷாவை திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.