கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி அரசின் செல்வாக்கு உயர்ந்திருப்பது கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
நரேந்திர மோடி பிரதமராகி 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு, கடந்த ஓராண்டில் மத்திய அரசு மக்களின் எதிர்பார்ப்பை எந்த அளவு பூர்த்தி செய்துள்ளது என்பது தொடர்பாக Local Circles என்ற அமைப்பு கருத்துக் கணிப்பு நடத்தியது.
ஆண்டுதோறும் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டு வரும் நிலையில், 2022ம் ஆண்டுக்கான கருத்துக்கணிப்பு முடிவுகள் நடத்தி முடிக்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 64 ஆயிரம் பேர் இதில் பங்கேற்று வாக்களித்துள்ளனர்.
அதில், மக்களின் எதிர்பார்ப்பை மத்திய அரசு பூர்த்தி செய்திருப்பதாக 67 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இது கடந்த ஆண்டு 51 சதவீதமாக இருந்தது.
கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலையை சிறப்பாக கையாண்ட மத்திய அரசு, மூன்றாவது அலை பெரிய பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் பார்த்துக்கொண்டதாக பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வேலைவாய்ப்பின்மையைப் போக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு 37 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த ஆதரவு கடந்த ஆண்டு 27 சதவீதமாக இருந்தது. வேலைவாய்ப்பின்மை பிரச்னையைக் களைய மத்திய அரசு மிகுந்த தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வருவதாக கருத்துக் கணிப்பில் பங்கேற்ற மக்கள் தெரிவித்துள்ளனர்.
2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் நரேந்திர மோடியே வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக வேண்டும் என்று 73 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில் காற்று மாசுவை கட்டுப்படுத்த மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என 44 சதவீதம் பேர் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
நாட்டில் மத நல்லிணக்கம் மேம்பட மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளதாக 60 சதவீதம் பேர் தெரிவித்துள்ள நிலையில், 33 சதவீதம் பேர் இதனை மறுத்துள்ளனர்.
தற்போது நாட்டில் தொழில் தொடங்குவது எளிதாக்கப்பட்டுள்ளதாக 50 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.









