உடல் எடையை உரிய முறையில் பராமரித்தால் மாடல் ஆகி விளம்பரப் படங்களில் நடித்தால் கோடிக்கணக்கில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சம்பாதிக்க முடியும் என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தர் தெரிவித்தார்.
சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இந்திய கிரிக்கெட் அணி கைப்பற்றியது. கடைசி ஒரு நாள் ஆட்டத்தில் 125 ரன்கள் எடுத்து இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அந்த ஆட்டத்தில் அவர் 2 சிக்ஸர்கள், 16 பவுண்டரிகள் விளாசினார். இதுதான் அவருக்கு சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் முதல் சதமாகும்.
இந்நிலையில், அவரை பாராட்டி பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் யூ-டியூப் சேனலில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
கட் ஷாட், புல் ஷாட், ரிவர்ஸ் ஸ்வீப் என அனைத்து வகையான ஷாட்டுகளை அச்சமின்றி அடித்து விளையாடினார் ரிஷப் பண்ட். இங்கிலாந்து தொடரை இந்தியா கைப்பற்றுவதற்கு உறுதுணையாக அவர் இருந்தார்.
ரிஷப் பண்ட் அதிக எடையுடன் இருக்கிறார். அவர் உடல் எடையைக் குறைத்து விளம்பரப் படங்களில் மாடலாக நடித்தால் கோடிக் கணக்கில் சம்பாதிக்க முடியும். ஏனென்றால் இந்திய சந்தை மிகப் பெரியது. இந்தியாவில் ஒருவர் நட்சத்திரமாக உருவெடுத்தால் அவர் மீது கோடிக் கணக்கில் முதலீடு செய்யப்படும்.
ரிஷப் பண்டிடம் அதிக திறமை உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் நன்கு கணித்து விளையாடினார். அவர் சூப்பர் ஸ்டாராக உருவாவதற்கான நேரம் வந்துவிட்டது. அவரை தடுத்து நிறுத்த அவரால் மட்டுமே முடியும் என்று புகழ்ந்தார் ஷோயப் அக்தர்.
வெண்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் ரிஷப் பண்ட் விளையாடவுள்ளார்.








