மிதிலி புயல் – 9 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

வங்கக்கடலில் மிதிலி புயல் உருவாகியுள்ள நிலையில் 9 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இலங்கை அருகே நிலைகொண்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாலும் தமிழ்நாட்டில் நவம்பர் 17 ஆம் தேதி முதல்…

வங்கக்கடலில் மிதிலி புயல் உருவாகியுள்ள நிலையில் 9 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இலங்கை அருகே நிலைகொண்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாலும் தமிழ்நாட்டில் நவம்பர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 22ஆம் தேதி வரை 6 நாள்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நவம்பர் 16 ஆம் தேதி வியாழக்கிழமை  காலை 5.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று,  விசாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 420 கி.மீ. கிழக்கு தென்கிழக்கே நிலைகொண்டுள்ளது.

இது வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து நவம்பர் 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை புயலாக வலுப்பெற்று  நவம்பர் 18 ஆம் தேதி சனிக்கிழமை  அதிகாலை வங்கதேச கடற்கரையையொட்டி நகர்ந்து மோங்லா-கேப்புபாராவு பகுதிகளுக்கு இடையே கடக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:குற்றாலத்தில் புனித நீராடிய ஐயப்ப பக்தர்கள் – துளசி மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர்.!

இந்தப் புயலுக்கு ‘மிதிலி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.  இந்தப் பெயரை மாலத்தீவு பரிந்துரைத்துள்ளது. இதற்கிடையே,  தென்மேற்கு வங்கக் கடல்,  இலங்கையையொட்டி,  வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நவம்பர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 22ஆம் தேதி வரை   பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

குறிப்பாக,  நவம்பர் 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி,  திருநெல்வேலி, தென்காசி,  தூத்துக்குடி,  விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும்,   நவம்பர் 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோவை மாவட்ட மலைப் பகுதிகள்,  நீலகிரி,  கன்னியாகுமரி, திருநெல்வேலி,  தூத்துக்குடி,  ராமநாதபுரம்,  சிவகங்கை,  புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகர் பகுதிகளில் நவம்பர் 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒருசில பகுதிகளில் இடி,  மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுப்பெற்று மத்திய மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி இருந்தது. இந்நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்பொழுது புயலாக மாறியுள்ளது.

இந்த ஆண்டு மட்டும் ஏற்கனவே இரண்டு புயல்கள் வங்கக் கடலில் உருவாகியுள்ள  நிலையில் மூன்றாவது புயலாக மிதிலி உருவாகியுள்ளது.  மிதிலி புயல் வடக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை காலை வங்கதேசத்தின் மோங்லா மற்றும் கேபுபரா இடையே கரையைக் கடக்கக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் கரையைக் கடக்கும் பொழுது 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக் கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள  மிதிலி புயல் தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை, கடலூர் , நாகை , தூத்துக்குடி, பாம்பன், எண்ணூர் , குளச்சல், காட்டுப்பள்ளி, காரைக்கால் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.