உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றத்தை தொடர்ந்து 3 கோப்புகளில் கையெழுத்திட்டு தனது அமைச்சர் பணியை தொடங்கினார்.
உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்கிற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்று கொண்டார். இதனையடுத்து ஆளுநர் மாளிகையிலுள்ள தர்பார் ஹாலில் இன்று பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
உதயநிதி ஸ்டாலின் எனும் நான் எனக் கூறி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். புதிதாக அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தலைமை செயலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அறைக்கு வெளியே இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை என்று பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து தலைமை செயலகத்தில் தனக்காக ஒதுக்கப்பட்டுள்ள அறைக்கு சென்று அமைச்சருக்கான இருக்கையில் அமர்ந்தார். அமைச்சர் துரைமுருகன் உதயநிதியை அழைத்து அவரது இருக்கையில் அமர வைத்தார்.
பின்னர், முதலமைச்சர் கோப்பைக்கான முதல் கோப்பில் முதல் கையெழுத்திட்டார் உதயநிதி. தொடர்ந்து வயதான 9 விளையாட்டு வீரர்களுக்கு மாதம் 6,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் கோப்பிலும், துப்பாக்கிச்சூடு போட்டியில் வென்றவருக்கு ரூ.4 லட்சம் ஊக்கத் தொகைக்கான கோப்பிலும் கையெழுத்திட்டார்.








