அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடனடி அறுவை சிகிச்சை தேவை – காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் குழு பரிந்துரை!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள காவேரி மருத்துவமனை மருத்துவக்குழு பரிந்துரை செய்துள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை அமைச்சர்…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள காவேரி மருத்துவமனை மருத்துவக்குழு பரிந்துரை செய்துள்ளது.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்ற போது செந்தில்பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை  நிறைவடைந்ததையடுத்து, அவருக்கு இதயத்தின் மூன்று முக்கிய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் உடனே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என ஓமந்தூரர் பன்னோக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.

செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கைகளை கருத்தில் கொண்டு உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அமைச்சர் செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதித்தது.

பின்னர், ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து நேற்று இரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்போடு அமைச்சர் செந்தில் பாலாஜி அழைத்து வரப்பட்டார். அவருக்குக் காவேரி மருத்துவமனையில் ஏழாவது தளத்தில் ஸ்கை வியூ வார்டு என்ற தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கொரோனரி அர்டெரி பைபாஸ் கிராஃப்ட் சிகிச்சை மேற்கொள்ள மூத்த இருதயவியல் மருத்துவர் ரகுராம் பரிந்துரை செய்துள்ளார். தற்போது ஐசியுவில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு அறுவை சிகிச்சைக்கு முன்பாக சில மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பரிசோதனைக்கு பிறகு அறுவை சிகிச்சை குறித்து முடிவு செய்யப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இருதயவியல் மருத்துவர்களால் அமைச்சர் செந்தில் பாலாஜி கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.