அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையின் அனைத்து கோரிக்கைகளையும் நிராகரித்த உச்சநீதிமன்றம் வழக்கை ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்ற போது செந்தில்பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நடந்த ஆஞ்சியோ பரிசோதனையில் அவருக்கு இதயத்தின் மூன்று முக்கிய ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய ஓமந்தூரர் பன்னோக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.
செந்தில் பாலாஜியின் தரப்பில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்ட நிலையில் நீதிபதி அல்லி அனுமதி வழங்கினார். இதனையடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்போடு அமைச்சர் செந்தில் பாலாஜி அழைத்து வரப்பட்டார்.
இந்த நிலையில், இன்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ரகுராம் தலைமையில் இந்த அறுவை சிகிச்சையில் செந்தில் பாலாஜியின் இதயத்திற்கு செல்லும் மூன்று ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை சரி செய்யப்பட்டன. சுமார் 4 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனையில் சார்பில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றிய உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி, நீதிபதிகள் சூர்யகாந்த், எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு முன் முறையிடப்பட்டது. இதனை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார்.
இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், அமலாக்கத்துறையின் மனு மீதான விசாரணையின்போது தங்கள் தரப்பு கருத்துக்களை கேட்ட பிறகே முடிவெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. நீதிபதிகள் சூர்யகாந்த், எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய கோடைகால சிறப்பு அமர்வில் இந்த விசாரணை நடைபெற்றது.
அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ” செந்தில் பாலாஜியை காவலில் எடுக்கும் போது ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்வது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணானது. இதுபோன்ற உத்தரவு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். இந்த விவகாரத்தில் ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு ஏற்றதே முரணானது ” என வாதிட்டார்.
இதற்கு பதலளித்த நீதிபதிகள் ”பல்வேறு உத்தரவுகளை மேற்கோள் காட்டினாலும், உயர்நீதிமன்றம் தனது கருத்தை வெளிப்படுத்துவதில் என்ன தவறு உள்ளது, ஒருவேளை உயர்நீதிமன்றம் தவறாக கையாண்டிருந்தால் இந்த நீதிமன்றம் அதனை அரசியல் சாசன விதி படி ரத்து செய்யும். உயர் நீதிமன்றம் அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு தான் முடிவு எடுத்ததாகக் கருதுகிறோம். உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பித்தானே விசாரணை நடத்தியுள்ளது உயர் நீதிமன்றத்தை தற்போதைய நிலையில் சந்தேகிக்க முடியாது.
ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும்போது அவரை காவலி்ல் எடுக்க முடியுமா..? அவரது உடல்நிலை சரியில்லை என மருத்துவ குழு சான்றிதழ் அளித்த பின்னர் அவரை காவலில் கொடுக்க வேண்டும் என கோருகிறீர்களா ? அவர் சிகிச்சை முடிந்த பின்னர் விசாரணை நடத்தலாமே. மருத்துவமனையில் உள்ள போது மருத்துவர்கள் கருத்தை கொண்டு தான் விசாரணை நடத்த முடியும். தற்போதைய நிலையில் உயர் நீதிமன்றம் விசாரணையை தொடர்வதுதான் சரியாக இருக்கும்” என தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து வாதங்களை முன்வைத்த சொலிசிட்டர் ஜெனரல் “ இந்த வழக்கு பிற குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக இருக்கும். எனவே இந்த ஆட்கொணர்வு மனு விசாரணை விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தவறாக நடந்துள்ளது. இந்த வழக்கு மிகவும் தீவிரமானது, எனவே தான் இந்த விவகாரத்தில் விசாரணை வேண்டும் என கேட்கிறோம். தற்போதைய உயர்நீதிமன்ற உத்தரவால் குற்றம் சாட்டப்பட்டவரை காவலில் எடுக்க முடியவில்லை” என தெரிவித்தார்.
இதற்கு பதலளித்த நீதிபதிகள்” செந்தில் பாலாஜியை தீவிர பரிசோதனை செய்த பின்னரே நிபுணர்கள் கருத்து அடிப்படையில் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், என்பதை உயர்நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளதே. மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருக்கும் ஒருவரை முழுமையாக காவலில் எடுத்து விசாரிக்க கோரியதை நிராகரித்த விசாரணை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது அதிருப்தி அளிக்கிறது.
மருத்துவர்கள் தீவிரமாக ஆராய்ந்துதான் தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளனர். உயர் நீதிமன்றம் அனைத்து அதிகாரங்களும் கொண்டது, விரைந்து விசாரித்து உத்தரவு பிறப்பிக்க முடியும். தேவைப்பட்டால் மீண்டும் ஒரு மருத்துவைக் குழுவை அமைத்து ஆராயலாமே. இந்த விசயத்தில் உயர் நீதிமன்றம் என்ன உத்தரவுகளை பிறப்பிக்கிறது என்பதைப் பார்த்த பின்னர் உச்ச நீதிமன்றம் விசாரிக்க தயாராக உள்ளது.
உயர்நீதிமன்றம் ஆட்கொணர்வு மனு மீது தனது இறுதி உத்தரவை 22ம் தேதி பிறப்பிக்க உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் உத்தரவை பார்த்த பின்னர் உச்ச நீதிமன்றம் விசாரிக்கும். வழக்கு ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது” நீதிபதிகள் தெரிவித்தனர்.








