ஸ்ரீ வைகுண்டம் அருகே விவசாயி தோட்டத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஆழ்துளை கிணற்றில் இருந்து பால் நிறத்தில் வரும் தண்ணீர், பஞ்சத்திற்கான அறிகுறியா? விவசாயி அச்சம். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீ வைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தை சேர்ந்தவர்
பால்பாண்டி. இவருக்கு சொந்தமான கிணறு மற்றும் தோட்டம் சேரகுளம் அருகே உள்ள
தீராத்திகுளத்தில் உள்ளது. இந்த கிணற்று பாசனம் மூலம் வாழை மற்றும் தென்னை, பருத்தி விவசாயம் செய்து வருகிறார். இதற்காக இரண்டு ஆழ்துளை போர்கள் அமைத்து அதில் வரும் தண்ணீரை கிணற்றில் விட்டு, அதன் பின் கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் இறைத்து தண்ணீர் பாய்த்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது பயிரிடப்பட்டுள்ள தென்னை மற்றும் பருத்தி பயிருக்கு
கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் வீட்டில் இருந்து கிணற்றுக்கு சென்று தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அதற்காக இரண்டு ஆழ்துளை போரையும் போட்டுள்ளார். அப்போது அதில் ஒரு ஆழ்துளை போரில் இருந்து வரும் தண்ணீர் பால் போல் வெள்ளை நிறத்தில் வந்துள்ளது. ஆனால் மற்றொரு போரில் வந்த தண்ணீர் சரியான தண்ணீர் போன்றே வந்துள்ளது.
இதற்கிடையில் கடந்த ஒரு வார காலமாக ஒரு போர் தண்ணீர் மட்டும் பால் நிறத்தில்
வந்துள்ளது. இதனால் கிணற்று தண்ணீர் நிறம் மாறியுள்ளதால், அதிர்ச்சி அடைந்த விவசாயி பால்பாண்டி தொட்டியில் தண்ணீர் நிரப்ப அச்சப்படுகிறார். இதுகுறித்து விவசாயி பால் பாண்டி கூறுகையில், ”இப்போது முறையாக மழை பெய்யவில்லை. எனவே இது வறட்சிக்கான அறிகுறியாக இருக்கும் என்று அச்சப்பட வைக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை உடனே ஆய்வு செய்ய வேண்டும்” இவ்வாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ம. ஸ்ரீ மரகதம்







