காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததன் காரணமாக ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிந்து வருகிறது. 258 நாட்களுக்குப் பிறகு 100 அடிக்குக் கீழே மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்தது.
ஒகேனக்கல் காவிரிக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு நான்காயிரம் கன அடியாக நீடிக்கிறது. அதேசமயம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த ஆண்டு காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது முதல் நேற்று வரை அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் குறையாமல் இருந்தது. 258 வது நாளாக அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் 2,018 கண அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 2,049 கன அடியாக குறைந்தது.
இந்நிலையில் இன்று காலை 2,107 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக 12,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
தண்ணீர் வரத்தைக் காட்டிலும் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று காலை 100.27 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 99.50 அடியாக சரிந்துள்ளது.
நீர்வரத்து சரிந்த நிலையில் தொடர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் 258 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் சரிந்தது. இந்த நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை அதிகரித்துள்ளது.
இதனால் கர்நாடகத்தில் உள்ள கபினி கே.ஆர்.எஸ் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனை அடுத்து இரு அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த தண்ணீர் ஓரிரு நாட்கள் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் கர்நாடகத்தில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.