கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் நட்சத்திர வீரர் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
தென் அமெரிக்க நாடுகள் பங்கேற்கும் கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் பிரேசிலில் நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்ற போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
பிரேசிலியா நகரில் இன்று நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி, கொலம்பியாவை எதிர்கொண்டது.
ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் லட்டாரோ மார்டினேஸ் கோல் அடித்து அசத்தினார். இதனைத் தொடர்ந்து 61வது நிமிடத்தில், கொலம்பியா வீரர் லூயிஸ் டையாஸ் பதில் கோல் திருப்பினார். ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை பின்பற்றப்பட்டது.
பெனால்டி ஷூட் அவுட்டில் கொலம்பியா வீரர்கள் சொதப்ப, அர்ஜெண்டினா அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஜூலை 11ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினா அணி, நடப்பு சாம்பியன் பிரேசிலை எதிர்கொள்கிறது.







