இந்திய மாணவர்கள் தங்கள் மருத்துவப் படிப்பை தங்குதடையிலாமல் தொடர உக்ரைன் நாட்டுடன் பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யா – உக்ரைன் இடையே நடைபெறும் போரால் பல்வேறு நாடுகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு உக்ரைன் மக்கள் கல்வியில் பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருகிறார்கள். இதில், இந்திய மாணவர்கள் பல்லாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யா – உக்ரைன் இடையே நடைபெறும் போர் கடந்த நூறு நாட்களுக்கு மேலாக நடந்துவந்த நிலையில் இதுவரை எந்த முடிவுக்கும் வரவில்லை. இந்நிலையில், உக்ரைன் நாட்டில் மருத்துவம் பயின்று வரும் இந்திய மாணவர்கள் படிப்பைத் தொடர முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உயிருக்கு உத்திரவாதம் இல்லாத சூழ்நிலையில் மத்திய “ஆப்ரேசன் கங்கா ” திட்டத்தின் மூலம் இந்திய மாணவர்களை பாதுகாப்பாக இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்டனர். இது மிகுந்த பாராட்டுக்குரியது. உக்ரைன் போரினால் மூடப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிகள் , மருத்துவ பல்கலைகழங்கள் ஆன்லைனில் இந்திய மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தியது. மருத்துவப் படிப்பு ஆன்லைனில் என்பது மற்றப் படிப்புகளைப் போல இல்லை. செய்முறை பயிற்சியோடு கூடிய படிப்பு தொடர வேண்டும். அப்பொழுதுதான் அது முழுமை பெறும். கல்லூரிக்கும் செல்ல முடியாமல் ஆன்லைனிலும் முழுமையாகப் படிக்க இயலாமல், இந்திய மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர்.
இச்சூழலில் உக்ரைன் மருத்துவப் பல்கலைக்கழகங்கள் நீங்கள் படிப்பைத் தொடர விரும்பினால் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் வரவேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்கிறது. அதோடு செமஸ்டர் கட்டணங்களை உடனடியாக கட்டச்சொல்கிறது. இல்லையென்றால் உங்கள் படிப்பு அங்கீகாரம் பெறாது என்று கூறப்படுகிறது. இதனால் மருத்துவ மாணவர்களும், பெற்றோர்களும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
ஆகவே இந்திய அரசும், தேசிய மருத்துவக் கவுன்சிலும் உடனடியாக இந்த பிரச்சனையில் ஓர் தீர்வு காண வேண்டும். மேலும், மத்திய அரசு, இந்திய மாணவர்கள் தங்கள் மருத்துவப் படிப்பு தங்குதடையிலாமல் தொடர உக்ரைன் நாட்டுடன் பேசி ஒரு நல்ல முடிவுக்கு வரவேண்டும். இல்லையென்றால் இந்திய மாணவர்கள் தங்கள் தாய் நாட்டிலேயே படிப்பைத் தொடர மாற்று ஏற்பாடு செய்வதற்கான பெற்றோர்களின் வேண்டுகோளை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா