திரைப்பட வாய்ப்புக்காக திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து சென்னை வந்த ரங்கராஜன் என்ற வாலிக்கு வாய்ப்பு கிடைப்பதாக தெரியவில்லை. நண்பர்கள் நடிகர் நாகேஷ், பின்னணி பாடகர் பி.பி. ஸ்ரீனிவாஸ் உடன் தி.நகர் விடுதியில் தங்கியிருந்த வாலி, இனியும் தாமதித்தால் சாப்பிடக் கூட காசு இருக்காது என்ற எண்ணத்தில் மீண்டும் பெட்டி படுக்கையுடன் சொந்த ஊருக்கு புறப்பட தயாராக இருந்தார். அப்போது பாடல் பதிவுக்காக சென்றுவிட்டு அறைக்கு திரும்பிய பி.பி ஸ்ரீனிவாஸ், இன்றைக்கு கவிஞர் கண்ணதாசனின் அருமையான ஒரு பாடலை பாடினேன்.. அதைக் கேட்டுவிட்டு நீ உன் முடிவை சொல்லு என வாலியிடம் கூறி… சுமைதாங்கி திரைப்படத்தில் இடம்பெற்ற கண்ணதாசனின் மயக்கமா கலக்கமா பாடலை பாடிக் காட்டினார்…
வந்த துன்பம் எதுவென்றாலும் , வாடி நின்றால் ஓடுவதில்லை …..எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும் என்ற வரிகளை கேட்டதும் பெட்டியுடன் புறப்பட தயாராக இருந்த வாலி தனது எண்ணத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு வாய்ப்பு தேட தொடங்கினார். ஆம்… வாலி என்ற அற்புதக்கவிஞனை அறிமுகப்படுத்திய பெருமை ஒரு வகையில் கண்ணதாசனையே சேரும். இதை வாலியே ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் கண்ணதாசனை சந்தித்த வாலி தான் எழுதியிருந்த கவிதையைப் படித்துக்காட்டினார்… “காட்டுக்குள் தேனீக்கள் கூட்டுக்குள் வைத்ததை, பாட்டுக்குள் வைத்தவனே!” எனத் தொடங்கும் பாடலை வாலி பாடிக்காட்ட, கண்ணதாசன் மகிழ்ந்தார். எதிர் எதிர் அணியில் நின்றாலும், ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டியதில் இருவரும் சளைத்தவர்கள் அல்ல…
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வாலிக்கு இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையில் பாட்டு எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாலி எழுதிய ‘ஒடிவது போல் இடையிருக்கும் இருக்கட்டுமே’ என்ற பல்லவியை படித்துப் பார்த்த விஸ்வநாதன். மூக்குப் பொடியை உறிஞ்சியபடி. “இவ்வளவு நாளா எங்கே இருந்தீங்க?” எனக் கேட்டார்… இந்தப்பாடலில் கவி பிறக்கும் பிறக்கட்டுமே என வாலி எழுதிய வார்த்தைக்கு ஏற்றபடி புதிதாய் பிறந்தார் கவிஞர் வாலி… அன்று தொடங்கிய ஆரவாரம், அவர் மரணிக்கும் வரை நீடித்தது.
எந்த கவிஞரின் வரிகளால் ஈர்க்கப்பட்டாரோ அந்த கவியரசு கண்ணதாசனின் மரணத்தின்போது இரங்கற்பா வடித்த வாலி…”உன் மரணத்தால் ஓர் உண்மை புலனாகிறது.. எழுதப் படிக்கத் தெரியாத எத்துணையோ பேர்களில் – எமனும் ஒருவன்…அழகிய கவிதைப் புத்தகத்தைக் கிழித்துப் போட்டுவிட்டான்…” என குறிப்பிட்டிருந்தார்.
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் என்ற முத்தான பாடலை எழுதிய கவிஞர் வாலி ஒரு கட்டத்தில முக்காலா முக்காபுலா என்று பாடல் எழுதினார். இதனை குறிப்பிட்டு கொடுத்ததெல்லாம் கொடுத்தான் பாடல் வரிகள் கொடுத்ததை விட முக்காலா தந்தது அதிகம்… காலத்துக்கேற்ப நாமும் மாறிக்கொள்ள வேண்டும் என்றார் வாலிபக் கவிஞர் வாலி