மன்சூர்அலிகான் தனது மகனை கதாநாயகனாக வைத்து தயாரித்துள்ள கடமான்பாறை படத்திற்கு திரையரங்குகள் கிடைக்காததால் அவர் விரக்தியில் உள்ளார்.
மன்சூர் அலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரித்துள்ள படத்திற்கு “கடமான்பாறை“ என்று பெயரிட்டுள்ளார். இந்த படத்தில் மன்சூரலிகானின் மகன் அலிகான் துக்ளக் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மேலும் இந்த படத்தில் மன்சூர் அலிகான் ஆதிவாசியாக ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
மேலும் இப்படத்தில் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல் கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளுசபா மனோகர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
கல்லூரியை கட்டடித்து விட்டு மலைபகுதிக்கு சுற்றுலா செல்லும் கதாநாயகன் மற்றும் அவரது நண்பர்கள் காட்டுப்பகுதியில் மாட்டிக் கொள்கின்றனர். அப்போது, ஆதிவாசி மன்சூர் அலிகானிடம் அவர்கள் மாட்டி கொள்கின்றனர். பின்னர் அவர்கள் உயிரடன் வெளியேறுகின்றனரா? மன்சூர் அலிகான் அவர்களை என்ன துன்புறுத்திகிறார் என்பதை படத்தின் கதை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கடமான் பாறை படத்திற்கு திரையரங்குகள் கிடைக்காததால் மன்சூர் அலிகான் விரக்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் நாளை மறுநாள் (26-ம் தேதி) வெள்ளிக்கிழமை தமிழ்நாடு முழுவதும் வெளியிட, முன்கூட்டியே தீர்மானித்து பத்து லட்சம் ரூபாய் செலவில் வெளியீட்டு தேதியுடன் போஸ்டர் அடிக்கப்பட்டுள்ளது. ஆனால் படத்தை வெளியிட எந்த திரையரங்குகளும் கிடைக்கவில்லை.
எதிர்பார்த்தபடி போதிய திரையரங்குகள் கிடைக்காததால் “கடமான்பாறை” படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் இவ்வளவு நாள் பொறுத்தும் பயனில்லயே என மன்சூர் அலிகான் வேதனையில் உள்ளதாகவும், இன்று இரவுக்குள் கேட்ட திரையரங்கங்கள் கிடைக்காவிட்டால் OTTயில் கடமான்பாறை திரைப்படத்தை வெளியிட மன்சூர் அலிகான் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
– இரா.நம்பிராஜன்








