தமிழ்நாடு அமைச்சரவையில், முதன்முறையாக நாளை புதிய அமைச்சராக பதவியேற்கவுள்ள மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரான டிஆர்பி. ராஜா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் கடந்த 2ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில், அமைச்சரவை மாற்றம் பற்றியும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வரும் மே 11ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் நடைபெற உள்ளதாகவும், புதிய அமைச்சரவையில் மன்னார்குடி எம்.எல்.ஏ டிஆர்பி ராஜா இடம்பெறுவார் எனவும், சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி திமுக ஆட்சி இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் கடந்த மே 7 ஆம் தேதி அடியெடுத்து வைத்தது. இந்நிலையில், தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் ஆவடி நாசரை விடுவித்து, எம்பி டி.ஆர்.பாலுவின் மகனும், மன்னார்குடி தொகுதியின் எம்.எல்.ஏ-வும் ஆன டி.ஆர்.பி.ராஜாவை அமைச்சராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.
மன்னார்குடி எம்.எல்.ஏ-வாக இருக்கும் டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரியிருந்தார். அந்த கோரிக்கையை ஏற்று ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். அதேபோல் பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் ஆவடி நாசரை விடுவிக்கவும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆளுநரின் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ளார்.
அதன்படி மே 11 ஆம் தேதி, காலை 10.30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் வைத்து டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது முறையாக எம்.எல்.ஏவாக இருக்கும் டி.ஆர்.பி.ராஜா, திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அப்பதவியில் இருந்து விலகிய நிலையில், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராக டிஆர்பி ராஜா நியமிக்கப்பட்டார். பல்வேறு பொறுப்புகளில் திறம்படப் பணியாற்றி, திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் நம்பிக்கையைப் பெற்றுள்ள டி.ஆர்.பி.ராஜா, தற்போது முதல் முறையாக கேபினட்டில் இணைகிறார்.
இதனையொட்டி, தமிழ்நாடு அமைச்சரவையில் புதிதாக இணைந்துள்ள மன்னார்குடி எம்.எல்.ஏவான டி.ஆர்.பி.ராஜா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
- பி.ஜேம்ஸ் லிசா