ரூ. 20 மதிப்பிலான மஞ்சப்பை மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 10 ரூபாய்க்கு வழங்கப்படுவதாக சுற்றுச்சூழல் துறைச் செயலாளர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய சுப்ரியா சாஹு, கோயம்பேட்டில் மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தில் வரிசையில் நின்று மக்கள் பைகளை வாங்குகிறார்கள். தரமான மஞ்சப்பை கொடுக்க வேண்டும் என்பதால் 20 ரூபாய் மதிப்பிலான மஞ்சப்பை 10 ரூபாய் மானியத்தில் அளிக்கப்படுகின்றது. விலை குறைந்தால் மக்களிடம் கூடுதல் வரவேற்பு இருக்கும் என்பதால் சுய உதவிக் குழுக்களிடம் மஞ்சப்பை தயாரிக்கும் பணியைக் கொடுக்கவுள்ளோம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மஞ்சப்பை வழங்கும் இயந்திரங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும், சந்தைகள், வணிக வளாகங்களில் வைக்கப்படவுள்ளன. பிளாஸ்டிக் நம்முடைய வாழ்க்கையில் வந்துவிட்டது. இந்த வாழ்க்கை முறையை மாற்றுவது சவாலானது, அரசு மட்டும் செய்ய முடியாது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டிற்காக ஒரு வருடத்திற்குள் ரூ. 3 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 60 கடைகளும், உற்பத்தி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதற்கு எண்ணங்கள், அணுகுமுறையில் மாற்றம் வேண்டும்.
காடுகள் பரப்பளவை 23.7 இல் இருந்து 33% ஆக அதிகரிக்க இந்த வருடத்திற்கான இலக்காக 1 கோடியே 7 இலட்சம் மரக்கன்றுகள் நட வேண்டும். மழைக் காலம் தொடங்கியவுடன் மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடங்கும். காடுகள் பரப்பளவை அதிகரிக்கும் பணியை உறுதியாக செய்ய முடியும் என்றார்.
-ம.பவித்ரா