மணிப்பூர் மாநிலத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலையால் அடுத்த 5 நாட்களுக்கு இணைய சேவைகளை முடக்குவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மணிப்பூர் மாநிலம் பிஷ்னுபூர் பகுதியில் வேன் ஒன்றுக்கு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த 4 பேர் தீவைத்து எரித்தபோது, 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். பின்னர் இது தொடர்பாக வெடித்த கலவரம் சாதி கலவராக மாறியது. மேலும் மாநிலம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. இதனால் சிக்கலான சூழ்நிலையை தவிர்க்கும் வகையில் அடுத்த 5 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் இணைய சேவைகள் மற்றும் செல்போன் சேவைகள் துண்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அம்மாநில அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், சில சமூக விரோதிகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பொதுமக்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் வெறுப்புப் பேச்சுகளை பரப்புகின்றனர். இதன் காரணமாக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பிஷ்னூபூர் மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தால், மாவட்டம் முழுவதும் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால், செல்போன் தகவல்களால் மேலும் போராட்டம் செய்ய தகவல்கள் பரிமாற்றப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய அம்மாநில அரசு அடுத்த 5 நாட்களுக்கு செல்போன் மற்றும் இணைய சேவைகளை நிறுத்தி வைப்பதாக விளக்கமளித்துள்ளது.
இதனிடையே, பிஷ்னுபூர் மாவட்டத்தில் வேன் தீயிட்டு எரிக்கப்பட்ட இடத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக அம்மாநில உளவுத்துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். அசம்பாவிதங்களை தடுப்பதற்காக மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் இடங்களாக கருதப்படும் பகுதிகளில் போலீசார் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
– இரா.நம்பிராஜன்








