நம்மை அடிமைப்படுத்தி மிருகங்களாக நடத்தும் அந்நியர்கள் மீது பாய்ந்து சின்னா பின்னப்படுத்துங்கள்.. இவர்களை துரத்திவிட்டு நம் நாட்டை பழைய நிலைக்கு உயர்த்திடுவோம்… என முழங்குகிறான் அந்த இளைஞன்… முதல் சுதந்திரப் போராட்டத்திற்கு தொடக்கப்புள்ளி வைக்கப்பட்டது, அங்கு தான்… அதற்கு காரணம் 29 வயதே ஆன, ஒரு படைவீரன்…. வடக்கே உதித்த அந்த திங்கள் தான்… மாவீரன் மங்கள் பாண்டே..
உத்தரப்பிரதேசம் மாநிலம் நாக்வா கிராமத்தில், வசித்த பாரம்பரிய இந்து குடும்பத்தில் 1827ஆம் ஆண்டு பிறந்தவர் மங்கள் பாண்டே.. அடிமைப்பட்ட தேசத்தின் வரலாற்றை, வளரும் பருவத்தில் அறிந்திராத அவர், தனது 22வது வயதில் ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியில் உள்ள படைப்பிரிவில் சேர்ந்தார். அரசுப் பணி, உயரதிகாரிகளுடன் நட்பு என சீரான முறையில் 7 ஆண்டுகள் உருண்டோடின. அதன் பின்னர் தான் மங்கள் பாண்டேவை வீரனாக மாற்றும் அந்த நிகழ்வு அரங்கேறியது.
கொல்கத்தா பாரக்பூர் நகரில் உள்ள 34வது படைப்பிரிவில் அவர் பணியாற்றி கொண்டிருந்தபோது, மத அடையாளங்களை பயன்படுத்தவும், பசு மற்றும் பன்றி கொழுப்பில் இருந்து தயாரிக்கப்பட்ட தோட்டாக்களை பயன்படுத்தவும் படை வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டதே அதற்கு காரணம். தன்னிடம் இருக்கும் துப்பாக்கிகளை பிடுங்குவதற்குள் வெள்ளைக்காரர்களை ஒரு கை பார்த்துவிட வேண்டும் என எண்ணினார் மங்கள் பாண்டே. இதனை அறிந்த, சார்ஜெண்ட் மேயர் ஹ்யூசன், அவரை கைது செய்ய ஆணையிட்டார்.
மங்கள் பாண்டேவை கைது செய்ய சக படைவீரர்கள் தயங்கிய சில நொடிகளிலேயே, அவரது கையில் இருந்த துப்பாக்கி சார்ஜெண்ட் மேஜரின் உடலை பதம் பார்த்தது. தொடர்ந்து, மற்றொரு உயரதிகாரியான பாக் (baugh), மங்கள் பாண்டேவின் வாளுக்கு இரையானார். பெரும் போராட்டத்துக்கு பிறகு சுட்டுப் பிடிக்கப்பட்ட மங்கள் பாண்டே, ஒரு வார விசாரணைக்கு பிறகு தூக்கிலிடப்பட்டார். அவரது வாழ்க்கை வரலாறு, இந்தி நடிகர் அமீர்கான் நடிக்க ‘மங்கள் பாண்டே தி ரைசிங்’ என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டது.
சூரியனின் அஸ்தமனம் முடிவு அல்ல… அதுவொரு புது விடியலுக்கான ஆரம்பம்… அதேபோல், தான் மங்கள் பாண்டேவின் இறப்பு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிழக்கிந்திய கம்பெனியில் பணியில் இருந்த நமது படை வீரர்களிடம் விடுதலைக்கான கிளர்ச்சியை ஏற்படுத்தியது.
அடிமைப்பட்ட தேசத்தில் வசிக்கும் மக்களின் முதல் கனவு சுதந்திரம் தான். நாம் சுவாசிக்கும் இந்த சுதந்திரக் காற்று, பல வீரர்கள் இன்னுயிரை தியாகம் செய்ததால் கிடைத்ததே… அதற்கு தொடக்கப் புள்ளி வைத்த மங்கள் பாண்டேவின் வீரம், வரலாற்றில் காலம் கடந்தும் நிலைத்து நிற்கும்.









