சென்னையில் நான் அவனில்லை திரைப்பட பாணியில் விவாகரத்து ஆன பெண்களை மேட்ரிமோனி மூலமாக குறி வைத்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் தீபா. இவர் வேலைக்கு ஆட்களைத் தேர்வு செய்து அவர்களை பெரிய நிறுவனங்களுக்கு வேலைக்கு அனுப்பும் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். தீபாவிற்கு கடந்த ஆறு வருடத்திற்கு முன் திருமணமாகி தற்போது கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்று தனிமையில் இருந்து வந்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 2020ஆம் ஆண்டு தீபாவிற்கு அவரது உறவினர்கள் மேட்ரிமோனி மூலம் வரன் பார்த்து வந்துள்ளனர். அப்போது தான் மேட்ரிமோனி மூலம் சென்னை ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்த அரவிந்த் அறிமுகமாகியுள்ளார். தீபாவிடம் தான் துபாயில் பணிபுரிந்து வருவதாகவும், தனக்கும் விவாகரத்து ஆனதாகவும் நல்ல வரனை பார்த்து வருவதாகவும் தீபாவிடம் அரவிந்த் கூறியுள்ளார்.
இதனை தீபா நம்பியதையடுத்து, இருவரும் திருமணம் தொடர்பாக நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். நேரில் மிகவும் அன்பானவராக நடந்து கொண்ட அரவிந்தால்
தீபா திருமணம் செய்வதாக ஒப்புக் கொண்டுள்ளார். இருவரும் அவ்வப்போது சந்தித்துப்
பேசி வந்துள்ளனர். இதனால் மிகவும் நெருக்கமாகி தீபா அரவிந்தை மிகவும்
நம்பியுள்ளார். இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தீபாவிடம்
போன் செய்த அரவிந்த் தாய், தந்தை இல்லாமல் தனிமையில் இருக்கும் உனக்கு நகைகள் மற்றும் பணம் இருப்பது பாதுகாப்பு இல்லை. எனவே, அதனை தன்னிடம் தந்துவிடுமாறு கூறியுள்ளார். அதனை நம்பிய தீபா தன்னிடம் இருந்த 50 சவரன் நகை மற்றும் பணத்தை தி.நகரில் தங்கியிருந்த அரவிந்தனிடம் கொடுத்துள்ளார்.
நகைகள், பணத்தை பெற்றுக் கொண்ட பின் அரவிந்தனை தொடர்பு கொள்ள முடிவில்லை. அதன் பின் அரவிந்தன் வீட்டின் அக்கம் பக்கத்தினரிடம் தீபா விசாரித்தபோது, அரவிந்த் ஏற்கனவே திருமணமாகி இங்கு குடும்பத்துடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த தீபா சென்னை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
போலீஸ் விசாரணையில், மேட்ரிமோனியில் கணவர் இல்லாமல் இருக்கும் பெண்கள், விவாகரத்து ஆன பெண்களை குறிவைத்து திருமணம் செய்வதாகக் கூறி பணம் மற்றும் நகைகளை பெற்றுக் கொண்டு அதன்பின் தலைமறைவாகிவிடுவார் என்பதும், சென்னை தேனாம்பேட்டையில் அவர் மீது இதுபோன்று பல பெண்கள் புகார் அளித்திருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், தி.நகரில் குடும்பம் நடத்திய பெண் கூட இதுபோன்று ஏமாற்றி திருமணம் செய்த பெண் என்பதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்தப் பெண்ணும் அரவிந்த் மோசடி பேர்வழி என்று தெரிந்தபின் அவர் மீது புகார் அளித்துள்ளார்.
இதுபோன்று சென்னையில் மட்டும் விவகாரத்தான மற்றும் தனிமையில் இருக்கும் நான்கிற்கும் மேற்பட்ட பெண்கள் அரவிந்தால் ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அரவிந்தை கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேட்ரிமோனி மூலம் வரன் பார்க்கும் பெண்கள் இதுபோன்று மோசடி ஆசாமிகளிடம்
சிக்கிக் கொள்ளாமல் இருக்க நன்கு விசாரித்து, அதன்பின் முழு விவரத்தை தெரிவிக்க
வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகவும் உள்ளது.