குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க மலேசிய அரசு திட்டம்..!

மலேசியாவில் 16 வயதிற்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இணையத்தின் அசுர வளர்ச்சியால் சமூக வலை தளங்களின் பயன்பாடு உலகளவில் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் நாடுகளை கடந்து அனைத்தையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இணையத்தால் எந்த அளவு  நன்மை உள்ளாகிறதோ அதே அளவு தீமைகளும் விளைகிறது.

சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சமூக ஊடகங்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்து வருகின்றன. இதனை தொடர்ந்து குழந்தைகளின் சமூக ஊடக பயன்பாட்டை குறைக்க உலக அளவில் பல்வேறு நடவடைக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்ஸில் கூறுகையில், ”அடுத்த ஆண்டுக்குள், 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகக் கணக்குகளைத் தொடங்குவதை தடைசெய்யும் அரசாங்கத்தின் முடிவுக்கு சமூக ஊடக தளங்கள் இணங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அரசாங்கம், அரசு நிறுவனங்கள் மற்றும் பெற்றோர்கள் என ஒவ்வொருவரும் அவரவர் கடமையை செய்தால், மலேசியாவில் இணையமானது குழந்தைகளுக்கு பாதுகாப்பானதாக இருப்பதை உறுதிசெய்ய முடியும்” என்று தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களில் கணக்குகளை தொடங்கவோ, பயன்படுத்தவோ தடை விதித்துள்ளது. இது வரும் டிசம்பர் 10-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்பது குறிப்படத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.