இலங்கை அரசியலில் முக்கிய பங்களிப்பை ஆற்றும் வகையில் தான் மீண்டும் வருவேன் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் ஏற்பட்ட போராட்டங்கள் காரணமாக கடந்த மே 9ம் தேதி பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்தார்.
இதையடுத்து எதிர்க்கட்சியைச் சேர்ந்த ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனிடையே, மகிந்த ராஜபக்சவுக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அவர் மருத்துவமனயில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், தலைநகர் கொழும்பில் நடைபெற்ற ஆளும் பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச கலந்து கொண்டார். அப்போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரிடம் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
அப்போது, தனது உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியான செய்தி உண்மையல்ல என்றும் தான் ஆரோக்கியமாக இருப்பதாகவும் கூறிய மகிந்த ராஜபக்ச, மீண்டும் அரசியல் நடவடிக்கைகளைத் தொடங்குவேன் என தெரிவித்துள்ளார்.








