பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுடன் நிலம் ஒப்பந்தம் மேற்கொண்டதாக மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமலாக்கத்துறை தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் கண்டு வழக்குப்பதிவு செய்து அவர்களுக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து ரெய்டுகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களில் ஏற்கெனவே மகாராஷ்டிரா மாநில அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து இது இரண்டாவது கைது நடவடிக்கையாகும். கடந்த வாரம் இப்ராஹிமின் சகோதரர் இக்பால் கஸ்கர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது கைது செய்யப்பட்ட அமைச்சர் நவாப் மாலிக், தாவூத் இப்ராஹிமுடன் நிலம் ஒப்பந்தம் மேற்கொண்டதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார்.
தாவூத் இப்ராஹிமின் கூட்டாளியுடன் பணப்பரிவர்த்தனை நடைபெற்றதற்கான ஆதாரங்களை அமலாக்கத்துறை தன்வசம் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக இன்று அமைச்சர் நவாப்பின் மும்பை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை மேற்கொண்டது. சுமார் 5 மணி நேரம் அமைச்சரிடம் விசாரணையும் செய்தது. இதில் தாவூத் இப்ராஹிமுடன் நில ஒப்பந்தம் செய்து சொத்துக்கள் வாங்கியதற்கான முக்கிய ஆதாரங்கள் விசாரணையில் வெளிவந்துள்ளதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின்போது அமைச்சர் தங்களிடம் சரியாக பதிலளிக்கவில்லை என்றும், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நவாப் மாலிக் 5 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராகவும், சிவசேனா தலைமையிலான அமைச்சரவையில் சிறுபான்மையினர் நல அமைச்சராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





