மகா கும்பமேளா – திரிவேணி சங்கமத்தில் நாளை புனித நீராடுகிறார் பிரதமர் மோடி!

மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாளை புனித நீராட இருக்கிறார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்வு நடைபெற்று வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா பிப்ரவரி மாதம் 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த ஆன்மிக நிகழ்வில் உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு, புனித நீராடி வருகின்றனர்.

இந்த வருடம் சுமார் 45 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுவரை 34.97 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.

இந்நிலையில் மகா கும்பமேளாவில் கலந்துகொண்டு பிரதமர் மோடி நாளை புனித நீராட உள்ளார். இதனால், பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமம் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இவ்விழாவில் பிரதமர் மோடி துறவிகளுடன் கலந்துரையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.