மணிப்பூர் பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக மதுரையில் அமெரிக்கன் கல்லூரி மாணவ, மாணவிகள் 1000 க்கும் மேற்பட்டோர் அமைதிப் பேரணி நடத்தினர்.
மணிப்பூரில் பெண்கள் மீதான் வன்முறை சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மாணவர்கள், அமைப்பினர் மற்றும் கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், மதுரை அமெரிக்கன் கல்லூரியைச் சேர்ந்த மாணவ – மாணவிகள் 1000 க்கும் மேற்பட்டவர்கள் இன்று அமைதிப் பேரணியில் ஈடுபட்டனர்.
மதுரை தல்லாகுளத்தில் தொடங்கிய பேரணி, தமிழன்னை சிலை, தமுக்கம் மைதானம், காந்தி அருங்காட்சியகம் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபெற்றது.
இப்பேரணியில் மத்திய அரசு மணிப்பூர் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்கிற முக்கிய கோரிக்கைகளை பதாகைகளாக அவர்கள் ஏந்திச் சென்றனர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர், மாணவர்களின் பேரணியை முன்னிட்டு 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- பி.ஜேம்ஸ் லிசா








