மதுரை அதிமுக மாநாட்டுக்கு தடையில்லை – உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. காரைக்குடியைச் சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்ததாவது: மதுரை…

மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

காரைக்குடியைச் சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்ததாவது:

மதுரை மாவட்டம் பெருங்குடி கருப்பசாமி கோயிலின் எதிர்புறத்தில் ஆக.20ல் அதிமுக சார்பில் மாநாடு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநாடு நடக்கவுள்ள இடம் மதுரை விமான நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது. தினசரி அதிகளவில் விமானங்கள் வந்து செல்கின்றன. தரையிரங்கும் போது மிகவும் தாழ்வான பகுதியில் தான் விமானங்கள் பறக்கும் விமான நிலையத்தை சுற்றிய பகுதிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட பகுதியாகவே உள்ளன.

மத்திய தொழில்படை பாதுகாப்பு மற்றும் போலீசாரின் கண்காணிப்பில் உள்ளது. சுமார் 15 லட்சம் பேர் மாநாட்டிற்கு வருவதாக அதிமுகவினர் கூறுகின்றனர். அன்றைய தினம் விமானங்கள் தரையிரங்குவதில் இடையூறு ஏற்படக்கூடும். மாநாட்டில் பங்கேற்போர் பட்டாசுகள் வெடிக்கும் போது வானில் உயரத்திற்கு பறந்து வெடிக்கும் போது அசம்பாவிதம் ஏற்பட்டால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

பட்டாசுகள் வெடிக்க தடை விதித்து பாதுகாக்கப்பட்ட பகுதியாக விமான போக்குவரத்து துறையால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் மாநாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாநாட்டிற்கு அனுமதி கோரும் முன் மதுரை விமான நிலைய அதிகாரியிடம் உரிய தடையின்மை சான்று பெறவில்லை. மாநாட்டிற்கு வருவோரால் பெருமளவு போக்குவரத்து இடையூறு ஏற்படும். எனவே ஆகஸ்ட் 20ம் தேதி அன்று மதுரை பெருங்குடியில் அதிமுக மாநாடு நடத்த தடை விதிக்க வேண்டும். மாநாடு நடத்த அனுமதிக்ககூடாது என உத்தரவிட வேண்டும் என மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் எஸ் எஸ் சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மாநாடு நிகழ்ச்சி முழுவதும் எவ்வித வெடிபொருட்களோ பட்டாசுகளோ வெடிக்க மாட்டோம் என உறுதிமொழி வழங்கி உள்ளோம் என அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் வாதிட்டார்.

நான்கு மாதத்திற்கு முன்பே மாநாடு நடைபெறுவது குறித்து  அறிவிப்பு செய்து விட்டனர் கடைசி நேரத்தில் தடை கேட்டால் எவ்வாறு முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மாநாட்டுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.