காவிரி நீர் தொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த இடையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
அண்மையில் டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் 9-ம் தேதி வரை கர்நாடகம் காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய 51-டி.எம்.சி நீரில் 15.டி.எம்.சி மட்டுமே தந்திருப்பதால் எஞ்சிய 38- டி.எம்.சி நீரை உடனடியாக திறக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் அதன்படி காவிரி மேலாண்மை ஆணையம் தண்ணீரைத் திறந்து விடக் கர்நாடகத்துக்கு உத்தரவிட மறுத்துவிட்டதால், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி உரிய நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
காவிரி பாசன பகுதிகளில் கருகும் நெற்பயிர்களைக் காப்பாற்ற உடனடியாக விநாடிக்கு 24,000 கன அடி வீதம் இந்த மாதம் முழுவதும் காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அதில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தது.
அதேபோன்று செப்டம்பர் மாதம் மாதம் திறக்க வேண்டிய 36.76 டி.எம்.சி நீரையும் கால தாமதமில்லாமல் உரிய நேரத்தில் திறந்து விடவும் கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும், காவிரி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் உரிய நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு மனுவில் வலியுறுத்தியிருந்தது.
இந்நிலையில் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில், தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி முறையீடு செய்தார். மேலும், காவிரி நீர் தொடர்பான வழக்கை முதலில் அவசரமாக விசாரிக்கக்கோரும் முறையீட்டுப் பட்டியலில் இணைக்கப் பதிவாளரிடம் கோரிக்கை வைக்கவும் அறிவுறுத்தினார்.







