மதுரை சிறை அங்காடியில் சிறைக் கைதிகள் தயாரித்த திருப்பதி லட்டு உள்ளிட்ட தீபாவளி இனிப்புகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
மதுரை மத்திய சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறை கைதிகள் உள்ளனர். சிறைத் துறையின் வாயிலாக கைதிகளின் மறுவாழ்வு மற்றும் வாழ்க்கை சீரமைப்பு வேண்டும் அடிப்படையில் பல்வேறு தோட்ட வேலை, சமையல் உள்ளிட்ட வேலை வாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, சிறையில் கைதிகள் பணி செய்து அதன் மூலம் ஈட்டப்படும் வருவாய் தங்களது குடும்பத்திற்கு வழங்கி வருகின்றனர்.
தீபாவளியை முன்னிட்டு மக்கள் இனிப்புகளை வாங்கி உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மதுரை மத்திய சிறையில் உள்ள மதுரை சிறைவாசிகளுக்கு இனிப்புகள் தயாரிக்கும் பயிற்சிகள் மத்திய சிறையின் ஏ.டி.எஸ்.பி வசந்த கண்ணன் மேற்பார்வையில் உதவி சிறை அதிகாரி பழனி தலைமையில் சிறைகைதிகள் மற்றும் காவல் துறையினர் இணைந்து இனிப்பு தயாரித்தனர்.
சிறை கைதிகளின் கைவண்ணத்தில் உருவான திருப்பதி லட்டு, மோதி லட்டு மற்றும் முந்திரி லட்டு என மூன்று வகையான லட்டுகள், ஜிலேபி, பாதுஷா, பால் இனிப்புகள், அதிரசம், பால் கோவா உள்ளிட்ட பல வகையான இனிப்புகள் தயாரிக்கப்பட்டு குறைந்த விலையான 260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெளிக்கடைகளில் ஒரு கிலோ இனிப்பு 350 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. மதுரை மத்திய சிறையில் ஒரு கிலோ இனிப்பு 260 ரூபாய்க்கு விற்பனையாவதால் மக்கள் ஆர்வமுடன் இனிப்புகளை வாங்கி செல்கின்றனர்.







