16 வயது சிறுமியின் கருவை கலைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!

மைனராக இருந்தாலும், கருவை கலைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட சிறுமி விருப்பத்தையும் கேட்க வேண்டும் என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம் அச்சிறுமியின் 24 வார சிசுவை களைக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

தன் மகளின் கர்ப்பத்தை கலைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாய் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், கடந்த ஜனவரி 7ம் தேதி தன்னுடைய 16 வயது மகள் கருவுற்றிருப்பது தெரிய வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த கர்ப்பத்தை கலைக்கக்கோரி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற போது, போதுமான வசதிகள் இல்லை என தெரிவிக்கப்பட்டதால், மாவட்ட அரசு மருத்துவமனையில் தனது மகளை அனுமதித்துள்ளார். அங்கு, மகளின் கர்ப்பம் 24 வாரம் கடந்து விட்டதாக கூறி, கருவை கலைக்க நீதிமன்றம் தான் உத்தரவிட வேண்டும் என மாவட்ட அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறுமியின் தாயார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செளந்தர், உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, குழந்தை பெற்றுக் கொள்வது பெண்ணின் தனிப்பட்ட உரிமை என்பதால், அந்த மைனர் பெண்ணுடைய விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனக்கூறி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அந்த பெண்ணின் கர்ப்பத்தை கலைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவிட்டார்.

மேலும் இது தொடர்பாக போக்சோ வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதால், அந்த சிசுவை பத்திரப்படுத்தி வைக்க அரசு மருத்துவமனைக்கு உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.