பண்டாரத்தி புராணம் பாடல்: மாரி செல்வராஜ் விளக்கம்!

பண்டாரத்தி புராணம் திரைப்படத்தின் பாடல் மஞ்சனத்திப் புராணம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று இயக்குநர் மாரிசெல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தனுஷ் நடிக்கும் கர்ணன் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 9ம் தேதி…

பண்டாரத்தி புராணம் திரைப்படத்தின் பாடல் மஞ்சனத்திப் புராணம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று இயக்குநர் மாரிசெல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடிக்கும் கர்ணன் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 9ம் தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் டீசர் மார்ச் 23ம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படத்தின் மூன்று பாடல்களான பண்டாரத்தி புராணம், கண்டா வரச் சொல்லுங்க, தட்டான் தட்டான் ஆகிய பாடல்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. பண்டாரத்தி பாடல் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை குறிக்கும் வகையில் இருப்பதால், அப்பாடலை நீக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் பண்டாரத்தி புராணம் பாடலின் பெயர் மஞ்சனத்திப் புராணம் என்று மாற்றப்படுகிறது என்று மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கதில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்ட அறிக்கையில் ”கர்ணன் திரைப்படம் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை நீங்கள் அளித்துவரும் ஆதரவும் நம்பிக்கையும் எனக்கு பெரும் உத்வேகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ஒரு இளம் இயக்குநரான என் மீது நீங்கள் காட்டும் எதிர்பார்ப்பும் மரியாதையும் தான் சினிமா என்னும் மாயக்கலையை எவ்வளவு பொறுப்போடு நான் அணுக வேண்டும் என்பதை எனக்கு கற்றுக்கொடுக்கிறது.

அத்தகைய பொறுப்புணர்ச்சியோடும் கலைத்தன்மையோடும் தான் நான் என் காட்சி படிமங்களை பெரும் சிரத்தையோடு உருவாக்குகிறேன். பண்டாரத்தி புராணமும் அப்படி உருவாக்கப்பட்டது தான். சொந்த அத்தையாக அக்காவாக ஆச்சியாக பெரியம்மாவாக என் நிலத்தோடும் என் இரத்தத்தோடும் கலந்து காலத்தின் தேவதைகளான பண்டாரத்திகளின் கதைகளைத் தான் நான் என் திரைக்கதையின் கூழாங்கற்களாகச் சிதறவிட்டு காட்சிப்படுத்தினேன்.

ஆனால், நம் சமூக அடுக்குமுறை உளவியலில் சில பெயர்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்பது புரிந்துகொள்ள முடியாததாகவும் விலக முடியாததாகவும் இருக்கிறது. அதன் அடிப்படையில் பண்டாரத்தி புராணம் பாடலுக்கு ஏற்பட்டிருக்கும் விவாதத்தையும் வருத்தத்தையும் கோரிக்கையையும் முடித்து வைப்பதற்காக இனி பண்டாரத்தியை மஞ்சனத்தி என்று அழைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்.

தேவதைகள் எந்த பெயரில் அழைக்கபட்டாலென்ன, பெயர் மாறுவதால் அவர்கள் காட்டும் மாட வெளிச்சம் குறைந்துவிடப் போகிறதா என்ன? இனி ஏமராஜாவின் மாடவிளக்காக மஞ்சனத்தி இருப்பாள். இனி ஏமன் கர்ணனை ஆட வைப்பதற்காக மஞ்சனத்தி புராணத்தை பாடுவான் கர்ணன் ஆடுவான் . ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியும் ப்ரியமும் எப்போதும். காதலே பிரபஞ்ச மாடத்தின் வெளிச்சம்” என்று ட்விட்டரில் பதிவிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு அல்லது மூன்று நாட்களில் யூடியூப்பிலும் பெயர் மாற்றப்பட்ட பாடல் வெளியாகும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.