பார்வையற்றோர் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழக வீரரை, கனிமொழி எம்.பி சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் வட்டம் கே.துரைசாமிபுரம் ஊராட்சியை
சேர்ந்த 24 வயதான மகாராஜா என்பவர் பார்வையற்றோருக்கான இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட் 27 வரை இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் நடைபெறும் சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு கூட்டமைப்பு உலக விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கிறார்.
தூத்துக்குடி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட விளாத்திகுளம் அருகே உள்ள மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி, எத்திலப்ப நாயக்கன்பட்டியில் நடைபெற்ற “மக்கள் களம்” நிகழ்ச்சியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியை சந்தித்த பார்வையற்றோருக்கான இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர் மகாராஜா வாழ்த்துப் பெற்றார்.
அப்போது, பாளையங்கோட்டையில் தங்கி பயிற்சி எடுத்து வரும் தங்களை தான் சந்திக்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன் என்று கூறிய கனிமொழி, மகாராஜாவிடம் இருந்து கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்டு, அதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும் கிரிக்கெட் வீரர் மகாராஜாவுக்கு ஊக்கத் தொகை அளித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்
ரூபி.காமராஜ்








