தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஒகேனக்கலில் காவிரி ஆற்றுக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 43,000 கன அடியாகக் குறைந்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 57,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி குறைந்துள்ளது.
மேலும் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் மழையின் தீவிரம் குறைந்ததால் நீர்வரத்து படிப்படியாகக் குறைந்து வருகிறது.
இதன் காரணமாக, கடந்த ஆறு நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பரிசல் இயக்கத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், ஆற்றில் குளிப்பதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
நீர்வரத்து குறைந்துள்ளதால், ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள் பரிசல் சவாரி செய்து மகிழலாம். மேலும், காவிரி ஆற்றில் பாதுகாப்பாகக் குளிக்கவும் முடியும் என தெரிவித்துள்ளது.







