‘எதையும் மாற்றும் காதல்’… மாணவியை மணக்க ஆணாக மாறிய டீச்சர்!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆசிரியை ஒருவர் தனது மாணவியை திருமணம் செய்வதற்காக ஆணாக மாறிய சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம், தீக் நகரில் வசிக்கும் மீரா, நாக்லாவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப்…

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆசிரியை ஒருவர் தனது மாணவியை திருமணம் செய்வதற்காக ஆணாக மாறிய சம்பவம் நடந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், தீக் நகரில் வசிக்கும் மீரா, நாக்லாவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரது மாணவி கல்பனா அதே பள்ளியில் படித்து வந்தார். கல்பனாவை பார்த்ததுமே மீராவுக்கு அவர் மேல் காதல் ஏற்பட்டுள்ளது.

இருவரும் காதலித்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இருவரும் பெண் என்பதால் சிக்கலை எதிர்கொண்டனர். இதையடுத்து, தனது பாலினத்தை ஆணாக மாற்றிக்கொள்ள மீரா முடிவு செய்து, பல்வேறு சிகிச்சைகளுக்கு பின் ஆணாக மாறியுள்ளார். ஆணாக மாறிய மீரா, கடந்த நவம்பர் 4ம் தேதி கல்பனாவை கரம் பிடித்தார். இரு வீட்டாரும் இவர்களது திருமணத்தை ஏற்றுக்கொண்டனர்.

இதுகுறித்து ஆணாக மாறி மீரா கூறுகையில், ஆணாக மாறிய பின் எனது பெயரை ஆரவ் என மாற்றி கொண்டேன். “காதலில் எல்லாமே நியாயம் தான்… அதனால் தான் எனது பாலினத்தை மாற்றிக்கொண்டேன்”.மேலும், பெண்ணாக பிறந்தாலும் தன்னை ஆணாகவே உணர்ந்ததாகவும் ஆரவ் கூறினார்.

திருமணம் குறித்து கல்பனா கூறுகையில், “தொடக்கத்தில் இருந்தே நான் அவரை காதலித்து வந்தேன். ஆணாக மாறுவதற்கான சிகிச்சையை செய்யாமல் இருந்திருந்தாலும் நான் அவரை திருமணம் செய்திருப்பேன்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.