உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலரட்டும் என காணொளியில் வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். மேலும்,
“சட்டமன்றத் தேர்தலில் நல்லாட்சி மலர்வதற்கு வாக்களித்த நீங்கள், உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலர்வதற்காக திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் நம்முடைய கூட்டணிக் கட்சியினருக்கும் உங்களது வாக்குகளை வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், ‘உத்தரவிடுங்கள் – உங்களுக்கு உழைக்கக் காத்திருக்கிறோம்’ என்று நாட்டு மக்களிடம் நாங்கள் வாக்குக் கேட்டோம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவர்களுக்கு வாக்களித்தால் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவார்கள் என்று எங்கள் மீது நம்பிக்கை வைத்து நீங்களும் உங்கள் வாக்குகளை வழங்கினீர்கள். உங்களால் முதலமைச்சர் ஆக்கப்பட்ட நான் மே 7-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டேன். பொறுப்பேற்றது முதல் இன்று வரை நாள்தோறும் உங்களுக்காக உழைத்துக் கொண்டு இருக்கிறேன். தேர்தலுக்கு முன்னால் என்னென்ன வாக்குறுதிகளைத் தந்தேனோ அந்த வாக்குறுதிகளைத் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறோம்.” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், திமுக செயல்படுத்திய திட்டங்கள் குறித்து பட்டியலிட்டார்.
“பெண்கள் அனைவருக்கும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயண வசதியைச் செய்துள்ளோம். குடும்ப அட்டைதாரர்களுக்கு நான்காயிரம் ரூபாய் கொடுத்துள்ளோம்.” என கடந்த 4 மாதத்தில் நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து கூறினார். மேலும்,
“பத்தாண்டு காலம் ஒரு கட்சியின் ஆட்சி இருந்தது. அவர்கள் இரண்டு சட்டமன்றத் தேர்தலின் போதும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பத்து ஆண்டுகளாக நிறைவேற்றவில்லை. ஆனால் ஆட்சிக்கு வந்த நான்கு மாத காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள் 505-இல் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிய அரசு இந்தியாவிலேயே தி.மு.க. அரசாக மட்டும்தான் இருக்க முடியும்.
இத்தகைய விவேகமும் பொறுப்புணர்வும் அக்கறையும் கொண்ட அரசுக்கு மக்களாகிய நீங்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இப்போது நான் வரிசைப்படுத்தியதைப் போல் ஏராளமான திட்டங்களை வரிசையாகக் கொண்டு வர இருக்கிறோம். அதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிகமிக அவசியம் ஆகும். எவ்வளவு பெரிய சிறந்த திட்டங்களை நாங்கள் தீட்டினாலும் அவை பெரும்பாலும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகத்தான் மக்களை வந்து சேரும். தடங்கலோ தடையோ இல்லாமல் அனைத்துத் திட்டங்களும் மக்களைச் சென்று சேருவதற்கு வழிவகை ஏற்படுத்தித் தருவதாக உங்களது வாக்குகள் அமைய வேண்டும்.
உள்ளாட்சியிலும் நல்லாட்சி அமைவதற்கான வாக்குகளாக உங்கள் வாக்குகள் அமைய வேண்டும்.
மக்களுக்காகவே சிந்திக்கிறோம். மக்களுக்காகவே செயல்படுகிறோம். மக்களே எங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உத்தரவிடுங்கள், உங்களுக்காக எந்நாளும் உழைப்போம்.
உங்களில் ஒருவனாக – உங்கள் சகோதரனாக – கலைஞரின் மகனாக – கடமை ஒன்றை மட்டுமே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்ட ஒருவனாகச் செயல்படும் நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்.” என்று தனது உரையில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.