உக்ரைனில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய மாணவர்கள் உட்பட பலருக்கு வாழும் கலை அமைப்பின் தன்னார்வ தொண்டர்கள் உதவி வருகின்றனர்.
உக்ரைன் – ரஷ்யப் போர் வலுத்துவரும் நிலையில், ரஷ்ய படைகள் 7 வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும், உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகள், குடியிருப்பு பகுதிகள் என ரஷ்ய படைகள் தாக்கி அழித்து வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஒரு புறம் போர் நிறுத்த பேச்சு வார்த்தைகளும் நடந்து வருகின்றன.
இந்நிலையில், ஐரோப்பாவில் உள்ள வாழும் கலையின் தன்னார்வத் தொண்டர்கள் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை அணுகி, அவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகளுடன், ஐரோப்பிய நாடுகளுக்குள் எல்லைகளை கடக்க முயற்சி எடுத்து வருகின்றனர்.
இது குறித்து என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறியதாவது: இந்த நெருக்கடியான நேரத்தில், மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நம்பிக்கையை விட்டுவிட வேண்டாம். ஐரோப்பா முழுவதிலும் இருந்து எங்கள் தன்னார்வலர்கள் உள்ளனர். உங்கள் அருகில் உள்ளவர்கள் தேவையான உதவிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்குவார்கள்.
ஹங்கேரி, போலந்து, ருமேனியா, ஸ்லோவாக்கியா, உக்ரைன், பல்கேரியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் உள்ள வாழும் கலை தன்னார்வத் தொண்டர்கள், இந்திய மாணவர்கள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேறி வருபவர்களுக்கும் தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.
ஹங்கேரியில் உள்ள வாழும் கலை அமைப்பினர் 150 க்கும் மேற்பட்டவர்களுக்கு தங்குமிடங்களை ஏற்பாடு செய்துள்ளனர், அதேபோல், போலந்தில் 500க்கும் மேற்பட்ட படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போலந்து எல்லையில் உள்ள தன்னார்வலர்கள் அங்கு வரும் மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஹங்கேரி, போலந்து, ருமேனியா, ஸ்லோவாக்கியா, உக்ரைன், பல்கேரியா மற்றும் ஜெர்மனி போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வாழும் கலை அமைப்பின் அகதிகள் மையங்கள் செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.