’விமான பயணத்தின்போது சக பயணியை தாக்கியவருக்கு வாழ்நாள் தடை’ – இண்டிகோ நடவடிக்கை!

விமான பயணத்தின்போது சக பயணியை தாக்கிய நபருக்கு இண்டிகோ விமானத்தில் பயணிக்க வாழ்நாள் தடை விதிப்பதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹுசைன் அகமது மஜும்தார் என்பவர் கடந்த  வியாழக்கிழமை இண்டிகோ விமானம் 6E138 மூலம் மும்பையில் இருந்து கொல்கத்தா சென்று கொண்டிருந்தார். பயணத்தின் போது உடல் நலக்குறைவு ஏற்பட்ட அகமதுவை விமானப் பணிப்பெண்கள் அவரது இருக்கைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது திடீரென மற்றொரு பயணி அகமதுவை கன்னத்தில் அறைந்தார். இதனால் அகமதுவுக்கு Panic attack ஏற்பட்டுள்ளது.

உடனே அகமதுவை தாக்கிய அந்த பயணியை விமானப்பணிப்பெண்களும் சகப்பயணிகளும் கண்டித்துள்ளனர். மேலும், விமானம் கொல்கத்தா விமான நிலையத்தை அடைந்தவுடன் அகமதுவை தாக்கிய அந்த நபர் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.  இந்த நிலையில் இண்டிகோ விமானத்தில் சகப்பயணியை தாக்கும் வீடியோ இணையத்தில் பரவியது. இதனையடுத்து விமான பயணத்தின்போது சக பயணியை தாக்கியவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இண்டிகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ” விமான பயணிகள் மற்றும் விமான பணியாளர்களின் நலனுக்குத்தான் நாங்கள் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். எங்கள் விமானத்தில் விதிகளை மீறி செய்யும் எந்த நடவடிக்கைக்கும் அனுமதி கிடையாது. விமானத்தில் சக பயணியை தாக்கியவர் எந்தவொரு இண்டிகோ விமானத்திலும் பயணிப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.