டெல்லியில், முதலமைச்சர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, மொழி என்பது நீதியை பெறுவதற்கான ஒரு வகையான தடையாக இருப்பதாக தெரிவித்தார்.
முதலமைச்சர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாடு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இறுதியாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற இந்த மாநாடு, கொரோனா உள்ளிட்ட காரணங்களால் 6 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் இன்று நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் மாநில முதலமைச்சர்கள் ஒருங்கிணைந்த இந்த மாநாட்டில், தமிழ்நாடு அரசு சார்பில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரியும் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, மத்திய சட்டத்றை அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆகியோர் முன்னிலையில் பிரதமர் மோடி இந்த மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, நீதிமன்றங்களில் பொதுமக்களும் எளிதில் புரியும் வகையில் நடைமுறைகள் மாற்றப்படுவதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நடவடிக்கை எடுத்தால் தான் மிகவும் மகிழ்ச்சியடைவேன் என தெரிவித்தார். வரும் 2027ம் ஆண்டிற்குள் நீதித்துறையை மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது அவ்வாறு செய்தால் தான் நீதி வழங்கக் கூடிய அமைப்பு எளிதில் அணுக கூடியதாகவும் குறைவானதாகவும் எளிமையானதாக இருக்கும், மேலும் மத்திய அரசு முடிந்தவரை நீதிபதிகள் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை செய்து வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
நீதிமன்றத்தின் தீர்ப்புகள் என்பது சாமானிய மனிதனும் புரிந்து கொள்ளக்கூடிய மொழிகளில் இருக்க வேண்டும் இல்லை என்றால் அது வெறும் உத்தரவாக மட்டுமே பார்க்கப்படுமே தவிர நீதியாக பார்க்கப்படாது. நீதித்துறையை மேலும் வலுப்படுத்துவதில் மாநில அரசினுடைய பங்கு என்பது மிகவும் அதிகம் என்றார். உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் அவர்களுடைய செயல்பாடுகளை ஆங்கில மொழியில் மட்டுமே மேற்கொள்கின்றனர், மொழி என்பது நீதியை பெறுவதற்கான ஒரு வகையான தடையாக இருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். சட்டப்படிப்புகளும், மருத்துவ படிப்புகளும், தொழில்நுட்ப படிப்புகளும் ஏன் ஆங்கிலத்தில் மட்டுமே பயிற்றுவிக்கப்படுகிறது ? ஏன் மாணவர்களுக்கு அவர்களது தாய்மொழியில் இந்தப் படிப்புகள் சொல்லிக் கொடுப்பதில்லை? என்றும் பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை டிஜிட்டல் இந்தியா என்பது வெறும் கற்பனையாக மட்டுமே இருந்து வந்த நிலையில் தற்போது இந்தியாவில் இருக்கக்கூடிய ஒவ்வொரு கிராமத்தில் இருக்கக்கூடிய சாதாரண மனிதன் கூட டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார்கள் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.