இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்கள் 23 பேரை விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன், கடிதம் எழுதியுள்ளார்.
நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் 23 பேரை, இலங்கை கடற்படையினர் படகுகளுடன் சிறைப்பிடித்துச் சென்றனர். அவர்களை விடுவிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, மத்திய இணையமைச்சர் எல். முருகன் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், தமிழ்நாடு மீனவர்களை, அவர்களது படகுகளுடன் பத்திரமாக விடுவிக்கபட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இதேபோல், இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் 23 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.







