கொரோனா விவகாரத்தில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டதாக, மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
அவர் பேசியது பின்வருமாறு: ’2020ம் ஆண்டு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் இதனால் பல்வேறு கஷ்டங்களை சந்திக்க நேர்ந்தது. ஒருவேளை ஊரடங்கு எனும் முடிவுக்கு மத்திய அரசு வந்தபோதே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு இருக்க வேண்டும்.
கொரோனா விஷயத்தில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டது. முதல் அலையின் போது அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, மருத்துவ பொருட்கள் தட்டுப்பாடுகளை எல்லாம் இந்தியா கண்ட போது நாம் கொரோனாவில் இருந்து தப்பி விட்டோம் என்று மத்திய அரசு கூறிக்கொண்டது. அதை அரசு கொண்டாடியது மட்டுமில்லாமல் மக்களையும் கை தட்டுங்கள், விளக்கு ஏற்றுங்கள் என கூறினீர்கள். ஆனால் இன்றுவரை கொரோனாவால் மக்கள் உயிரிழந்து கொண்டு தான் உள்ளார்கள், எந்த மருத்துவ வசதியும் இல்லாத இடத்தில் நாம் எப்படி வெற்றி கண்டோம் என கூறுகிறீர்கள்?. மேலும், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு எந்த விதிகளை உருவாக்கியதோ! அதை அரசால் தேர்தல் மூலம் அவ்விதிகள் உடைத்து எறியப்பட்டது. மத்திய அரசின் தவறான அணுகுமுறையால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். பொருளாதாரம் பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது.
தனி மனித பொருளாதாரத்தை உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எத்தனையோ முறை காங்கிரஸ் வலியுறுத்தியது ஆனால் அதை கண்டுகொள்ளாமல் மத்திய அரசு செயல்படுகிறது. கும்பமேளா நடத்தக்கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி மத்திய அரசு செயல்பட்டது.’ இவ்வாறு அவர் பேசினார்.







