கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 6-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள பிஜின் குட்டியின் சகோதரரிடம் இன்று தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள 5 தனிப்படை போலீஸர் இதுவரை 210-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர் விவேக் ஜெயராமன், அதிமுக பிரமுகர்கள் சஜீவன், சஜீவனின் சகோதரர் சிபி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி, அவரது மகன், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர்.
குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் 18 ஆண்டுகளுக்கும் மேலாக உதவியாளராகப் பணியாற்றி வந்த பூங்குன்றனிடம் போலீஸார் 3 நாட்கள் விசாரணை நடத்தி உள்ளனர். இந்த வழக்கில் முக்கிய தகவல்கள் எதுவும் கிடைக்காத நிலையில் போலீஸார் பல்வேறு தரப்பினரிடமும் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக ஏற்கனவே விசாரணை நடத்தியவர்களையும் மீண்டும் அழைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் ஆறாவது நபராக குற்றம்சாட்டப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த பிஜின் குட்டி என்பவரது சகோதரர் மோசஸிடம் போலீஸார் இன்று விசாரணை மேற்கொள்கின்றனர். வழக்கில் தொடர்புடைய நபர்களின் உறவினர்கள், அல்லது அவர்களுக்கு நன்கு அறிமுகமானவர்களிடம் முக்கிய குற்றவாளியாகக் என கருதப்படும் ஓட்டுனர் கனகராஜ் குறித்து ஏதேனும் தகவல் தெரியுமா என்பதை தெரிந்து கொள்வதற்காக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனகராஜ் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த வழக்கில் பல்வேறு தகவல்கள் மறைந்துவிட்டதாக கருதும் போலீஸார் அவற்றை கண்டுபிடிப்பதற்காக தற்போது தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.








