சமூக ஊடகவியலாளரான கிஷோர் கே சாமியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், புதுச்சேரியில் வைத்து கைது செய்தனர்.
பாஜக ஆதரவாவளரும், சமூக ஊடகவியலாளருமான கிஷோர் கே சாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மழை வெள்ளப் பாதிப்பு பணிகளை விமர்சிக்கும் வகையில் நவம்பர் 1ஆம் தேதி ட்விட்டரில் கருத்து பதிவிட்டார்.
இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கிஷோர் கே சாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணைக்காக நோட்டீஸ் அனுப்பியது. நவம்பர் 5, 7, 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகும்படி பல நோட்டீஸ்கள் அனுப்பியும் அவர் ஆஜராக இல்லை என கூறப்படுகிறது. இதனிடையே, முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கிஷோர் கே சாமி மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, விசாரணைக்கு ஆஜராகும்படி அனுப்பிய நோட்டீசுக்கு ஆஜராகாதவருக்கு முன்ஜாமீன் வழங்கினால், நீதிமன்றம் இந்த சமூகத்திற்கு தவறான தகவலை தெரிவிப்பதாகி விடும் எனக்கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்தார். இந்நிலையில், புதுச்சேரியில் தங்கியிருந்த கிஷோர் கே.சுவாமியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.







