தென்காசி இளம்பெண் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட வழக்கில், கிருத்திகாவை கேரள உறவினருடன் அனுப்பிவைக்க மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தென்காசியை அடுத்த கொட்டாகுளத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் வினித். இவரும், வல்லம் முதலாளி குடியிருப்பைச் சேர்ந்த மர அறுவை மில் அதிபர் நவீன் படேல் மகள் கிருத்திகாவும் கடந்த மாதம் 20-ம் தேதி காதல் திருமணம் செய்துள்ளனர். 25ம் தேதி கிருத்திகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், வீடு புகுந்து கடத்திச் சென்றதாகக் கூறப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. மேலும் கிருத்திகா மற்றும் வினித் ஆகியோரது வீடியோ மற்றும் ஆடியோ உரையாடல்களும் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், கடத்தல் வழக்கு தொடர்பாக கிருத்திகாவின் பெற்றோர் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். வினித்தும் மனைவியை கண்டுபிடித்து தருமாறு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கிருத்திகாவை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இதையடுத்து கிருத்திகா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கிருத்திகா மேஜர் என்பதால் யாருடன் செல்ல வேண்டும் என்பது அவரது விருப்பம். கிருத்திகா யாருடன் செல்ல வேண்டும் என்பதை எழுத்துப்பூர்வமாக தரவேண்டும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர். அவர் யாருடன் செல்கிறாரோ அவர்களே பெண்ணின் பாதுகாப்புக்கு முழு பொறுப்பு.
மேலும், அவரை முறையாக விசாரணைக்கு ஆஜர்படுத்தவேண்டும் என நீதிபதிகள் கூறினர். இதையடுத்து கிருத்திகா கேரளாவில் உள்ள உறவினர் ஹரிஷுடன் செல்வதாக எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்ததையடுத்து கிருத்திகா கேரளாவில் உள்ள உறவினருடன் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. மேலும், வினீத் மாரியப்பன் நீதிமன்றத்தை அணுகி உரிய நிவாரணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறி நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்துள்ளனர்.
-ம.பவித்ரா








