ஐஎஸ்ஐஎஸ் முகாம்கள் மீது அமெரிக்க ராணுவம் ட்ரோன் தாக்குதலை தொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
சமீபத்தில் ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே நிகழ்த்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 100ஐ கடந்தது. இதில் 13 அமெரிக்க ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐஎஸ்ஐஎஸ் மீது அமெரிக்க பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் முகாம்கள் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இலக்கு வெற்றிகரமாக அழிக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவ கமாண்டர் கேப்டன் பில் அர்பன் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் ஆப்கனின் நங்கர்ஹார் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, “மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு காரணமானவர்களை மன்னிக்கமாட்டோம்.” என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








