கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி நகராட்சியில் கொட்டும் மழையில் நகராட்சி தூய்மைப் பணியாளர் ஒருவர் உரிய கவச உடையின்றி தூய்மை பணியில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் ஆங்காங்கே மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி நகராட்சியில் பருவ மழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய்கள் தூர்வாருதல் மற்றும் சாலையோரங்களில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது இங்குள்ள 4வது வார்டு பகுதியில் கொட்டும் மழையில் தூய்மை பணியாளர் ஒருவர் போதிய கவச உடைகளின்றி குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
இதுகுறித்து ரெயின்கோட் இல்லாமல் தூய்மை பணி செய்து வருவதை ஒருவர் கேட்டப் பொழுது நகராட்சி சார்பாக நாளை கவச உடை வாங்கி தருவதாக கூறும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தூய்மைப் பணியாளர்களுக்கு தேவையான வசதியை செய்து கொடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேந்தன்







