சென்னை ஒமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் சிலை அமைக்கப்படும் என ஏப்ரல் 26ஆம் தேதி சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அன்றைய தினமே சிலை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டன.
இந்த நிலையில் கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு கருணாநிதி சிலையை திறந்துவைக்கிறார்.
கிட்டத்தட்ட 1975 ஆம் ஆண்டுக்குப் பிறகாக 2022இல் சென்னை அண்ணா சாலையில் மீண்டும் அமைகின்றது கருணாநிதியின் சிலை. 16 அடி உயரத்தில் கருணாநிதிக்கு இதுவரை நிறுவப்பட்ட சிலைகளிலேயே உயரமான சிலையாகவும், வெண்கல சிலையாகவும் இது அமைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள சிற்பக்கூடத்தில் சிற்பி தீனதயாளனால் உருவாக்கபப்ட்ட இச்சிலையின் பீடத்தில் கருணாநிதியின் ஐம்பெரும் முழக்கங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஓமந்தூரார் தோட்டத்திற்கு கருணாநிதிக்கு மிகவும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. தன்னுடைய கனவான புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்ட ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் பணிகள் நடைபெற்றபோது நாள்தோறும் அங்கு வந்து பார்வையிடும் வழக்கத்தை கொண்டிருந்தார். கடைசியாக கருணாநிதி முதலமைச்சராக பணியாற்றிய ஓமந்தூரார் தோட்டத்தில்தான். முதலமைச்சராக செய்தியாளர் சந்திப்பையும் கடைசியாக ஒமந்தூரார் தோட்டத்தில் தான் நடத்தியிருந்தார் கருணாநிதி. அவர் அதிகம் விரும்பிய இடங்களுள் ஒன்றான ஓமந்தூரார் தோட்ட வளாகத்திலேயே அமைகின்றது சிலை.
கருணாநிதியின் சிலை திறப்பிற்குப் பின் கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் சிறப்புரையாற்ற உள்ளனர். அண்ணா அறிவாலயம், திருச்சி, ஈரோடு, தூத்துக்குடியை தொடர்ந்து அண்ணா சாலையில் பெரியார் மற்றும் அண்ணா சிலைக்கு அருகிலேயே கருணாநிதி சிலை.